நாசூக்கு!
வெளியூர் சென்றதன் காரணமாக பன்னிரண்டு நாட்களுக்கும் மேலாக கிடப்பில் வைத்திருந்த கல்யாண மண்டபக் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். வெளியிலிருந்து என்னை அழைத்தார் அய்யா நிமோஷினி விஜயகுமாரன்; வாருங்கள்; அமருங்கள் என்று சொன்னேன்; அமர்ந்தார். கையில் வைத்திருந்த வேர்க்கடலை பாக்கெட் அப்போதுதான் பிரிக்கப்பட்டிருந்தது போலத் தெரிந்தது. எனக்கும் பாக்கெட்டோடு கொடுத்தார்; நாசூக்காக சிறியளவு எடுத்துக்கொண்டு திருப்பிக் கொடுத்து விட்டேன். இலேசான சூடாக இருக்கிறதே என்றேன். இல்லை இந்த பாக்கெட் வெயிலில் இருந்ததால் இப்படி இருக்கிறது என்றார். இப்படி இரண்டொருமுறை மாறி மாறி பரிமாற்றங்கள் நடந்தன. இதனிடையில் சில விஷயங்களையும் பேசினோம். திடீரென, ஒரு வேலையிருக்கிறது நான் கிளம்புகிறேன்; நீங்களும் உங்கள் கணக்கு வழக்குகளை முடியுங்கள், முடிந்தால் பிறகு வருகிறேன் என்று சொன்னவண்ணம் வெளியேறினார் அய்யா நிமோஷினி. அவர் சென்ற சில நிமிடங்களில் எனது மேஜை மேலிருந்த நெகிழிப்பை சில வேர்க்கடலைகளுடன் கிடந்தது. எனக்கு ஒரு சிறு நெருடல்; வாங்கி வந்தவரைவிட, அடிக்கடி வாங்கி நாமே அந்த பாக்கெட்டின் கடலைகளை அதிகம் தின்றுவிட்டோமோ என்று... அப்படி இருக்காது என நம்புங்களேன்!
ஒன்பது அல்லது பத்து வயதிருக்கும் எனக்கு; என்னையும் அழைத்த அம்மாவுடன் அவரது சிநேகிதி சகுந்தலாவின் வீட்டிற்குச் சென்றோம். அந்த அத்தைக்கு என்னை அதிகம் பிடிக்கும். உள்ளே சென்றவுடன் சகுந்தலா அத்தை எங்களுக்கு ஒரு தட்டில் இனிப்பு பண்டங்களை வைத்துக் கொடுத்தார்; பேச்சுவாக்கில் இரண்டொரு துண்டுகளைத் தின்றுவிட்டு என் அம்மா, அந்த அத்தையுடன் பேசத் துவங்கிவிடவே, எனக்கும் தீனி தாராளமாக இருந்தது. சில நிமிடங்களில் தட்டு காலி. ஏனோ தெரியவில்லை, அம்மா என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே மண்டையின் ஒரு மூலையில் எனக்கொரு எண்ணம். எனினும், அத்தை மீண்டும் எனக்காகக் கொண்டுவந்த இனிப்புகளைத் தின்னத் தொடங்கிய போது, அத்தை கவனிக்காவண்ணம் அம்மா எனது விரல்களைப் பற்றி, சற்றே முறுக்கிவிட்டார்; எனக்கொன்றும் புரியவில்லை; விரும்பி ருசிக்கிறேன் இடையில் அம்மாவா அத்தையா என்பதெல்லாம் கவனத்தில் கொள்வதாக இல்லை.
அம்மா மற்றும் அத்தையின் பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்து வெளியில் வந்த போது அத்தை, "இன்னும் வேணுமாடா எதுனாச்சும் சாப்பிட? அக்கா பசியோட இருக்கான்கா...சாப்பாடு சாப்பிட்டுப் போகட்டுமே" என்றார். "அதெல்லாம் ஒண்ணும் வேணா, வரும்போது நல்லா சாப்பிட்டுதான் வந்தான்" என்றார் அம்மா.
அங்கிருந்து சந்து முனை திரும்பியிருப்போம்; எனது தலை திடீரென 'நங்' என கிறுகிறுத்தது; ஓங்கி ஒரே கொட்டு. "எவ்வளவு கொடுத்தாலும் தின்னுக்கிட்டே இருப்பியா... வெளியில் வந்தா ஒரு நாசூக்குத் தெரியாதா...". வீட்டுக்கு வந்த பின் என் உடம்பு புண்ணானது.
ஏங்க நீங்களே சொல்லுங்க... பிடிச்ச தீனிக்கு முன்னாடி நாகரிகம் நாசூக்கு ஏதாச்சும் வேணுமாங்க... அதையே நாசூக்கா சொல்லிக் கொடுத்தா நாங்களும் நடக்கமாட்டோமா....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக